நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!
"நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க" இந்த வாக்கியத்தை எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? இதை ஒரு காரணமாக எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், இந்த வாக்கியம் இரண்டு தலைமுறைகளைத் தடம் புரளச் செய்திருக்கிறது. விருப்பப்பட்ட எதையும் செய்யவிடாமல் தடுக்க, கஷ்டமாக இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்ய, உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனம் போன்ற நிலையில் இருந்தாலும், மற்றவர்கள் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படும் முட்டுக்கட்டை. இந்த நிலையை எதிர்த்து போராடி, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் இதைச் செய்வேன் என்ற தைரியம் கொண்ட சிலர் வந்த முதல் தலைமுறையில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் எத்தனை முறை இந்தக் குட்டிச்சுவரைத் தாண்டி வந்தேன் என்று கேட்டால், விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் ஒரு கை விரல்கள் போதும். என் தாயிடம் கேட்டால், நான் தினமும் நான்கு முறை இப்படி ஏதாவது செய்கிறேன் என்று சொல்வார். இதில் மட்டும் அவரை நம்புவது தவறு. நான் பாவம், அப்பாவி. நாலு பேர் அல்ல, ஒருவரும் என்னைப் பற்றி எதுவும் தவறாகப் பேசிவிடக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க...